 |
19-ஆம் நூற்றாண்டின் பிற்பகுதியில் வெளிவந்த நூல் "எரேவான்" [Erewhon] ´ஸாமுவேல் பட்லர்´ [Samuel Butler] எதிர்காலத்தில் இயந்திரங்களின் ஆக்கிரமிப்புகள் இன்னும் பல மடங்கு அதிகரிக்கக்கூடும் என்றும் மனிதனையே அடக்கி ஆளக்கூடிய வலிமை இயந்திரங்ளுக்கு உண்டாகிவிடும் என்றும் குறிப்பிட்டு அந்நூல் முழுவதும் இயந்திரங்களின் ஆக்கிரமிப்பு எப்படி இருக்கக்கூடும் என எழுதுகிறார்.
இந்நிலைமை தொடருமானால் இயந்திரங்கள் நம்மை மிஞ்சி விடும். படிப்படியாக நம்மை ஓரங்கட்டிவிடும். கிட்டத் தட்ட மிருகங்களின் நிலைக்கு நாம் இறக்கி வைக்கப்பட்டிருப்போம். எனவே இயந்திரங்களை ஓரளவேனும் ஒழித்துக்கட்ட வேண்டும் என்கிறார்.
அப்படி ஏதாவது நம் காலத்தில் நடக்கிறதா என்ன?
எதிர்கால மனிதர்களை இன்றைய தொலைக்காட்சிகள் [இயந்திரம்] உருவாக்கிக் கொண்டிருக்கின்றன என்று நாம் கூறினால் நீங்கள் ´ஆம்´ என்றுதானே சொல்வீர்கள்?
இயந்திரங்கள் தன் இனத்தை பெருக்கிக் கொண்டதே அதிகம். இயந்திரங்களை ஒழித்துக் கட்டுவது என்பது நடக்கிற காரியமா?
மனிதனின் தேவைகளுக்கேற்ப புதிய புதிய இயந்திரங்கள் உருவாக்கப்பட்டுக் கொண்டு தானே இருக்கிறது. இயந்திரங்களை தவிர்க்கவோ, கட்டுப்படுத்தவோ முடியுமா? என்று ஸாமுவேல் பட்லரிடம் கேட்டவர்களும் அதிகம்.
பட்லர் நகைச்சுவையோடு சொல்கிறார்:
இயந்திரங்கள் எதிர்காலத்தில் இன்னும் அதிகமாக உற்பத்தி செய்யப்படலாம். இருப்பினும் எதிர்காலத்தில் இயந்திரங்கள் நம் மீது கருணை காட்டும் என்று நம்புவோம்.
நாய், குதிரை, மாடு போன்ற வளர்ப்பு பிராணிகளிடத்தில் நாம் எவ்வளவு அனுதாபத்தோடும், அன்போடும் நடந்துக் கொள்கிறோமோ அதுபோல இயந்திரங்களும் நம்மிடம் நடந்துக் கொள்ளக்கூடும்.
ஏனெனில், நம்முடைய உதவியும் இயந்திரங்களுக்குத் தேவை. இயந்திரங்கள் தங்கள் இனப்பெருக்கத்திற்கு மனிதர்கள் துணையின்றி எதுவும் செய்ய முடியாது.
இயந்திரம் நம் மீது கொடுங்கோல் செலுத்தக்கூடும். ஆனால் தின்றுவிடாது...
குட்டி இயந்திரங்களின் கல்விப் பயிற்சிக்கும் எடுபிடி வேலைக்கும்...
அவைகளுக்கு உணவு (நீராவி) தேடவும்...
நோய் ஏற்பட்டு முடியாமல் போனால் மருத்துவப் பராமரிப்புச் செய்யவும் (ரிப்பேர்)...
இறந்துவிட்ட இயந்திரங்களை அடக்கம் செய்யவும்...
அவற்றின் பயனுள்ள உதிரி பாகங்களைப் புதிய இயந்திரங்களுக்கு பொறுத்தவும்....
மனிதர்களின் உதவி இயந்திரங்களுக்கு தேவைப்படும்.
ஆக இயந்திரங்களுக்குப் பிரயோஜனமாக மனிதன் நடந்துக் கொள்ளும் வரை மனிதன் எதிர்கால சந்தோஷத்தை பற்றிக் கவலைக் கொள்ளத் தேவையில்லை. ஆனால் பூமியில் மனிதன் இரண்டாந்தர இனமாக ஆகிவிடக்கூடும்....
இப்படி ´ஸாமுவேல் பட்லர்´ எழுதும் ´எரேவான்´ நூலை நீங்களும் வாசித்துப் பாருங்கள்.
* Erewhon
http://ow.ly/1cdQs http://ow.ly/1cdPJ
தமிழச்சி 28.02.2010
|
 |